விமான நிலையங்கள் திறக்கப்பட்டன – கட்டாரில் இருந்து முதல் விமானம் இலங்கையை வந்தடைந்தது

0

இலங்கையில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் மீளத் திறக்கப்பட்டுள்ளன.

பயணிகளின் வருகைக்காக விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து கட்டார் நாட்டைச் சேர்ந்த இரண்டு விமானங்கள் இன்று கட்டுநாயக்கவை வந்தடைந்தன.

அதன்படி, அதிகாலை 2.15 மணிக்கு 53 பேருடன் முதல் பயணிகள் விமானம் டோஹாவில் இருந்து நாட்டை வந்தடைந்துள்ளது.

மே 21ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டுக்கு வந்த முதல் பயணிகள் விமானத்தில் இருந்தவர்களில் பலர் வெளிநாட்டு பயணிகள் என்றும் விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், 116 பேருடன் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் யுஎல் 218 விமானம் அதிகாலை 4.05 மணிக்கு விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

இதேநேரம், நேற்று நள்ளிரவில் விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டதில் இருந்து ஆறு விமானங்கள் இலங்கைக்கு வந்துள்ளன என விமான நிலைய மற்றும் விமான சேவைகளின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ.சந்திரசிரி தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, நாட்டில் தரையிறங்கிய ஆறு விமானங்களில் மொத்தம் 569 பயணிகள் வந்திருந்தனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

விமான நிலையங்கள் திறக்கப்பட்டுள்ள போதிலும் ஒரு விமானத்தில், 75 பேர் வரையில் மாத்திரமே பயணிக்க முடியும் என விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்துள்ளார்.

மேலும் இந்திய மற்றும் வியட்நாம் முதலான நாடுகளில் இருந்து வரும் பயணிகள், நாட்டுக்குள் பிரவேசிப்பது தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளது.

அந்த நாடுகளில் பரவும் கொரோனா வைரஸ் திரிபு நிலைமையைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக, கடந்த மாதம் 21ஆம் திகதி நள்ளிரவு முதல் நேற்று நள்ளிரவு வரை வெளிநாட்டிலிருந்து பயணிகள் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.