விரைவில் ஊரடங்கு சட்டத்தையும் தளர்த்தக்கூடியதாயிருக்கும் – ஜனாதிபதி

0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று(செவ்வாய்கிழமை) கோட்டே ஸ்ரீ கல்யானி சாமஸ்ரீ சங்க சபையின் மகாநாயக தேரர் சங்கைக்குரிய இத்தேபானே தம்மாலங்கார மகாநாயக்க தேரர் மற்றும் கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோரை சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.

கொவிட் 19 நோய்த்தொற்று குறித்த தற்போதைய நிலைமைகளை கேட்டறிந்த தம்மாலங்கார மகாநாயக்க தேரரும் கார்தினாலும் வைரஸை கட்டுப்படுத்தி மக்களை பாதுகாப்பதற்கு ஜனாதிபதி முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டங்களை பாராட்டினர்.

நோய்த்தொற்றை விரைவல் கட்டுப்படுத்த முடியும் என்று சமயத் தலைவர்கள் இருவரும் நம்பிக்கை தெரிவித்ததுடன், விரைவில் ஊரடங்கு சட்டத்தையும் தளர்த்தக்கூடியதாயிருக்கும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு வீடுகளிலிருந்து சமயக்கிரியைகளில் ஈடுபடுமாறு பௌத்த மக்களுக்கு அறிவிப்பதாக மகாநாயக்க தேரர் குறிப்பிட்டார். அதற்காக ஊடகங்களை பயன்படுத்தக்கூடிய வாய்ப்புகள் குறித்து ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் குறித்து கேட்டறிந்த கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னால் உள்ளவர்களை கண்டறிய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

தற்கொலை தாக்குதலின் மூலம் மரணத்தையும் கடந்த நோக்கங்கள் உள்ளதென குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள் அந்த நோக்கங்களின் பின்னால் உள்ளவர்களை கண்டறிய அரசாங்கம் முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டார்.

வீண்விரயங்கள், வைரஸ் தொற்று ஏற்படக்கூடிய வாய்ப்புள்ள தேர்தல் பிரச்சார முறைமையில் இருந்த விலகி புதிய தேர்தல் முறைமையொன்றை ஏற்படுத்துவது காலத்தின் தேவையாகும் என்று கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டார்.

அர்த்தமற்ற, அதிக செலவுகொண்ட தேர்தல் பிரச்சார முறைமையை மாற்றுவது குறித்து தானும் கவனம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

விவசாய பயிர்ச்செய்கைகளை மேற்கொண்டு வரும் பிரதேசங்களில் குளங்கள் மற்றும் நீர்ப்பாசன முறைமைகள் அழிவடைந்து வருவதாக தம்மாலங்கார மகாநாயக்க தேரர் குறிப்பிட்டார்.

அவற்றை திருத்தியமைப்பதற்காக அடுத்த வரவுசெலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்வதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.