வைரஸ் தொற்றை தடுக்கும் பணிகளில் இருந்தும் சுகாதார பரிசோதகர்கள் விலகல்- மருத்துவ அதிகாரிகள் சங்கம் அதிருப்தி

0

கொரோனா வைரஸ் தொற்று  உள்ளிட்ட தொற்று நோய்களை தடுக்கும் அனைத்து பணிகளிலும் இருந்து இன்று முதல் விலகுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடவத்தையில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் உள்ளிட்ட தொற்று நோய்களை தடுக்கும்  நோக்கில் சட்ட ரீதியான அதிகாரத்தை உருவாக்க வேண்டும் எனவும் அச்சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளில், பொது சுகாதார பரிசோதகர்களுக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை என சுகாதார அமைச்சர்  அண்மையில் தெரிவித்திருந்தார் .

எனவே  அவரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நேற்று முன்தினம் முதல் பொது சுகாதார பரிசோதகர்கள் குறித்த பணிகளில் இருந்து விலகியிருந்தனர்.

பொது சுகாதார பரிசோதகர்களின் இத்தகைய தீர்மானத்துாக்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.