14 பேர் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்த உறுதிபூண்டிருந்தனர்: சஹ்ரானிடம் பயிற்சிப் பெற்ற பெண் வாக்குமூலம்

0

14 பேர் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்த உறுதிபூண்டிருந்ததாக ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாசிமிடம் பயிற்சி பெற்றார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட யுவதி தகவல் வெளியிட்டுள்ளார்.

பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் வழங்கிய வாக்குமூலத்தில் அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

குறித்த 14 பேரில் ஐவர் சாய்ந்தமருது தாக்குதலில் மரணத்தனர் என்றும் 3 பேர் விளக்கமறியலில் உள்ளதுடன், தாம் உள்ளிட்ட 7 பேர் பயங்கரவாத தடுப்பு பிரிவின் தடுப்பில் உள்ளதாக குறித்த யுவதி  வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சஹ்ரான் ஹாசிமிடம் பயிற்சி பெற்றார் என்ற குற்றச்சாட்டில் மாவனெல்லையை சேர்ந்த 24 வயதுடைய குறித்த யுவதி நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பயங்கரவாத விசாரணை பிரிவின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய குறித்த யுவதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

மொஹமட் ஈப்ராஹிம் சஹிதா என்ற 24 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் மாவனெல்லை புத்தர் சிலை உடைக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்களின் சகோதரி என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.