கொழும்பு, வெள்ளவத்தையிலிருந்து வந்தவரால் யாழில் எடுக்கப்பட்டுள்ள அவசர நடவடிக்கை

0

யாழ். சங்கானை நகரில் அமைந்துள்ள மீன் சந்தை மற்றும் மதுபானசாலை என்பனவற்றை மறு அறிவித்தல் வரை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சங்கானை மீன் சந்தை வியாபாரிகள் 36 பேர் குடும்பத்துடன் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், சைக்கிள் கடை ஒன்றினைச் சேர்ந்த 6 பேரின் குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையும் 3 நாள்கள் மூடப்பட்டுள்ள நிலையில் சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலில் இந்த நடவடிக்கை பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கொழும்பிலிருந்து காரைநகருக்குத் திரும்பிய ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் யாழில் அவர் சென்று வந்த பகுதிகளில் இவ்வாறான அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கடந்த 21ஆம் திகதி கொழும்பு, வெள்ளவத்தையிலிருந்து காரைநகருக்கு வருகை தந்த அவர், 3 நாட்களுக்கு மேல் பல இடங்களுக்கு சென்று நடமாடிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு நேற்று அவரது மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு கோரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு அவர் சென்றதால் வைத்தியசாலையை 3 நாள்களுக்கு மூடுவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வைத்தியசாலையின் சேவையாளர்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் தொற்றுக்குள்ளான நபர் சங்கானை மீன் சந்தைக்குச் சென்றதால் அதனை மறு அறிவித்தல் வரை மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் 36 வியாபாரிகள் குடும்பத்துடன் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர் சைக்கிள் கடைக்குச் சென்ற நிலையில் அங்கு இருந்த 6 பேர் குடும்பத்துடன் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் அந்த நபர் சங்கானை மதுபான சாலைக்குச் சென்றார் என்று கண்டறியப்பட்ட நிலையில் மதுபான சாலைமறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.

அங்கு வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த 4 பேர் குடும்பத்துடன் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

அதில் தொற்று இல்லை என்று முடிவு கிடைத்தால் மீன்சந்தை, மதுபானசாலை என்பன திறக்க அனுமதிக்கப்படும் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.