தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்ல – இரா.சாணக்கியன்!

0

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகள் பறிபோவதற்கு நாங்கள் அனுமதி வழங்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

களுவாஞ்சிக்குடி பிரதேச சபை அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று(செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றிருந்தது.

அமைச்சர் சீதா அரம்பிபொல ஒரு நிகழ்ச்சியின் போது Vocational Training and Skills Development Ministry இனால் IT Incubation Centre (கணனிகளுடன் கூடிய) கொடுப்பதற்கான விடயம் குறித்து தெரிவித்த கருத்து தொடர்பாக இதன்போது பேசப்பட்டது.

இந்தநிலையில் இதனை களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் அமைப்பதற்கான ஒரு முன் மொழிவினை இரா.சாணக்கியன் குறித்த கூட்டத்தின் போது கொண்டு வந்திருந்தார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்ட இரா.சாணக்கியன், “களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் சிறு கைத்தொழில் உற்பத்திகளைச் செய்வதற்கு வளங்கள் இல்லை. இது ஒரு நகரப்புறமாகையினால் IT Industry – தகவல் தொழில்நுட்பத்துறையை அமைத்து இளைஞர்களை முன்னேற்றலாம் என்பதற்காக ஒரு IT Incubation Centre இனைக் கொண்டுவருவதற்கு பிரதேச செயலாளரிடம் கோரிக்கை ஒன்றினைச் சமர்ப்பித்தேன்.

அதற்கு அவர் தனக்கு இதற்கு முன்னரே கடிதமொன்று வந்ததாகவும், அதற்கு காணி இல்லை என பதிலனுப்பியதாகவும் தெரிவித்தார். அதற்கு நான், IT Incubation Centre இனை களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தினுள் உள்வீதிகளில் உள்ள அரச காணிகளில் அமைக்கலாம் எனக் கூறினேன்.

இதனை உடன் கவனத்திலெடுத்து சீதா அரம்பிபொலவிற்கு அனுப்புவதற்கு அபிவிருத்திக் குழு தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தனும் சம்மதம் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்ல. அபிவிருத்தியென மக்களிடம் தரப்படும் விடயங்கள் அனைத்தும் பரிசளிப்பதாக மக்களுக்கு வழங்கப்பட்டாலும், அவை மக்களிடமிருந்து அறவிடப்படும் வரிப் பணத்தின் மூலமே அரசாங்கம் மேற்கொள்கின்றது. இந்த வேலைத்திட்டங்களை அரசாங்கமே மேற்கொள்கின்றது என நாங்கள் நினைக்க வேண்டிய தேவை இல்லை.

இது எங்களின் உரிமை. இதை நாங்கள் கேட்டெடுக்க வேண்டும். எங்களுக்கு உரிமையும், அபிவிருத்தியும் வேண்டும் என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாக உள்ளது. அபிவிருத்தி என்ற பெயரில் எங்களது காணிகள் பறிபோவதற்கு நாங்கள் அனுமதி வழங்க முடியாது.“ எனக் குறிப்பிட்டார்.