பட்டதாரிகள் டிப்ளோமாதாரிகளின் விண்ணப்பத்திற்கான வயதெல்லை 45 ஆக அதிகரிப்பு!

0

தொழில் வாய்ப்பற்ற பட்டதாரிகள் தொழிலை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பத்தினை விண்ணப்பிக்கும் வயதெல்லை முன்னர் 35 என உயர்த்தப்பட்டு இருந்தது. தற்போது அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் அரச தொழில் வாய்ப்பினை வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 45ஆக வயதெல்லை உயர்த்தப்பட்டுள்ளது. இதை விடவும் அதிக வயதையுடைய பட்டதாரிகள் மற்றும் மக்கள் அமைப்பினரின் கோரிக்கைகளை கவனத்திற்கொண்டு இந்த வயதெல்லையை உயர்த்த தீர்மானித்துள்ளதாகவும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில்

தொழிலை எதிர்பார்த்துள்ளவர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள முதலாவது பட்டப் படிப்பொன்றை அல்லது அதற்கு சமமான தகைமையாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள டிப்ளோமா பாடநெறி ஒன்றினை 2019.12.31ஆம் திகதி பூரணப்படுத்தியிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரி விண்ணப்பிக்கின்ற பிரதேச செயலாளர் பிரிவில் நிரந்தரமாக வசிப்பவராகவும் 2020.01.01 ஆம் திகதிக்கு பட்டம் பெற்று ஒரு வருடத்திற்கும் அதிக காலம் தொழிலின்றி இருப்பதாகவும் கிராமசேவகர் மற்றும் பிரதேச செயலாளர் உறுதிப்படுத்தவேண்டும்.

விண்ணப்பங்களை உரிய முறையில் பூர்த்தி செய்து பட்டச் சான்றிதழ் அல்லது டிப்ளோமா சான்றிதழ் மற்றும் பெறுபேறு ஆவணத்தின் புகைப்படப் பிரதி ஒன்று (மூலப் பிரதியுடன் ஒத்திருப்பதை சமாதான நீதவான் ஒருவர் அல்லது சட்டத்தரணி ஒருவரினால் உண்மையான பிரதி என்பதை உறுதிப்படுத்தி) 2020.02.20ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை தபால் திணைக்களத்தின் Speed Post Courier சேவையின் ஊடாக அனுப்பி வைக்கப்படல் வேண்டும். விண்ணப்பங்களை ஜனாதிபதி அலுவலகத்தின் www.presidentsoffice.gov.lk என்ற இணையத் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்ய முடியும்.

தொழில் வாய்ப்பற்ற பட்டதாரிகள் டிப்ளோமாதாரிகளிற்கு தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் 2020, நிறுவன முகாமைத்துவ மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவு, ஜனாதிபதி அலுவலகம், காலி முகத்திடல், கொழும்பு – 01 என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.

கடிதத்தின் இடதுபக்க மேல் மூலையில் பட்டதாரியாயின் “பட்டதாரி (மாவட்டத்தின் பெயர்) என்றும் டிப்ளோமாதாரி / (மாவட்டத்தின் பெயர்) என்றும் குறிப்பிடப்படுதல் வேண்டும். குறித்த திகதிக்கு பின்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

தெரிவுசெய்யப்படும் பட்டதாரிகளுக்கு பயிற்சிக் காலத்தின்போது 20,000 ரூபா கொடுப்பனவாக வழங்கப்படும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.