மலையக மக்களுக்காகவும் குரல்கொடுப்போம் – மாத்தளையில் சாணக்கியன் !!

0

மலையக மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கவும் தொடர்ந்தும் குரல் கொடுப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மலையக மக்களுக்காக 1949 இல் இருந்தே இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி குரல் கொடுத்து வந்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்று மாத்தளை நகரிலும் முன்னெடுக்கப்பட்டது.

மாத்தளை மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்தும், தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை தெரிவுசெய்ய முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது என்றும் அது மாறவேண்டும் என்றும் கூறினார்.

இப்பகுதிகளில் நாம் தேர்தல்களில் போட்டியிடாவிட்டாலும்கூட, மலையக மக்களுக்காக குரல் கொடுத்து வந்துள்ளோம். ஆயிரம் ரூபா பிரச்சினையைக்கூட சர்வதேச மயப்படுத்தினோம்.

பொத்துவில் முதல் பொலிகண்டிவரை முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் 10 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அதில் ஒன்று இந்த ஆயிரம் ரூபா சம்பள விவகாரம்.

ஆனால் தற்போதைய சூழ்நிலையில் 1000 ரூபா போதாது. 2000 ரூபா வழங்கப்பட்டாலும் சமாளிக்க முடியாத வகையிலேயே நாட்டில் விலைவாசி உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.